
சேலம்
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், தங்கள் நிலத்தை திமுக நிர்வாகி அபகரித்துவிட்டார் அதனை மீட்டு தருமாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீக்குளிக்க முயற்சித்தனர்.
சேலம் அருகே பெருமாம்பட்டி கிள்ளன்வட்டம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அங்கு வந்தவர்களில் நால்வர் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், “பெருமாம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி பழனியம்மாள், இவரது மகன் ரமேஷ் (26), மருமகள் சசிகலா (23), இவர்களது இரண்டு வயது குழந்தை மோனிகா ஆகியோர் தான் தீக்குளிக்க முயன்றவர்கள்.
இவர்கள் நிலப்பிரச்சினை தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்து தீக்குளிக்க முயன்றது தெரிந்தது.
அப்போது, பழனியம்மாள் கதறி அழுதபடி அங்கிருந்த காவலாளர்களின் காலில் விழுந்து, எங்களது சொத்தை எப்படியாது மீட்டுக் கொடுங்கள் எனக் கூறி கெஞ்சினார். பின்னர், அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவருடன் வந்திருந்த உறவினர்கள் சிலர் பழனியம்மாளுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினர்.
“எனது மாமனார் பெரிய ஐயம்பெருமாள். அவருக்கு வயது 100. அவருக்கு லட்சுமி, பாப்பா என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி லட்சுமிக்கு கோவிந்தராஜ், தங்கராஜ், கந்தசாமி மற்றும் எனது கணவர் மாரிமுத்து ஆகிய நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி பாப்பாவிற்கு ஐந்து மகன்கள் உள்ளனர்.
பெரிய ஐயம்பெருமாளுக்குச் சொந்தமாக 2 ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர்களது வாரிசுகள் 10 பேருக்கும் சமமாக பிரித்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அதன்படி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாப்பாவின் வாரிசுதாரர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து, எங்களுக்கு தெரியாமல் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த மாமனார் பெரிய ஐயம்பெருமாளை அப்படியே தூக்கிச் சென்று திமுக நிர்வாகி ஒருவருக்கு மொத்தமுள்ள நிலத்தில் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனர். அதற்கான பத்திரப்பதிவு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்தது.
திமுக பிரமுருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் எங்களது வீடுகளும் அடங்கும். இது குறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நாங்கள் அனைவரும் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி ஒருதரப்பினர் மட்டும் நிலத்தை கிரயம் செய்து கொள்ள முடியும்? எங்களது பிரச்சனையில் பஞ்சாயத்து பேச வந்த திமுக பிரமுகர் திட்டமிட்டு எங்களது நிலத்தை அபகரித்துவிட்டார். எனவே, அவர் செய்த பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.