சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற "இந்திய பி அணிக்கும்". பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பியாட் செஸ் திருவிழா
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடபெற்ற போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த செஸ் திருவிழா நேற்றோடு முடிவடைந்தது. இதனையடுத்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. ஆடவருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை உஸ்பெகிஸ்தான், மங்கோலியா அணிகளுக்கு வழங்கப்பட்டது. மகளிருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை டென்மார்க் அணி வென்றது. ஃபேர்-பிளே விருது ஜமைக்கா நாட்டை சேர்ந்த வீரருக்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற இந்திய அணி
தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் போர்டு பிரிவில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அர்ஜூன் எரிகாசி வெள்ளிப் பதக்கமும், நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்கள் பிரிவில் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்மிக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிக்கையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் "இந்திய பி அணியும் பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும் என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பரிசு அறிவித்த தமிழக அரசு
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற "இந்திய பி அணிக்கும்". பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்