கத்திபாரா போராட்டம் போன்று மற்றொரு போராட்டத்தை நடத்த தூண்டுவதாக இயக்குனர் கவுதமனுக்கு சென்னை மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் மீதேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், காவேரி மேலான் வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த நேரத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமனும் சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாத நிலையில், நீண்ட நேர போராட்டத்துக்கு பின், அங்கு சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலையின் நடுவில் இரும்பு சங்கலியை கட்டி பூட்டிவிட்டனர். போலீசார், கட்டப்பட்டு இருந்த மாநகராட்சியின் பிளாஸ்டிக் பேரி கார்டை உடைத்து, சங்கிலியை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் கவுதமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், கத்திபாரா போராட்டம் போன்று மற்றொரு போராட்டத்தை நடத்த இளைஞர்களை தூண்டுவதாகவும், இதுகுறித்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னை மவுண்ட் துணை ஆணையர் முன்பு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.