ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வில் 13,350 பேர் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து சென்னையில், நடைபெற்றுவரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீர் என்பவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தேர்வில் பிட்டு அடிப்பது போல் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதில் கேட்டு தேர்வு எழுதியுள்ளார்.
இதைப்பார்த்த போலீசார் சபீர் கபீரை பிடித்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உதவியதற்காக அவரது மனைவியும் சிறையில் உள்ளார்.
இதையடுத்து கேரளாவில் நெடுமஞ்சேரி அருகில் உள்ள சபீர் கரீமின் வீட்டிலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி மையங்களிலும் தமிழ்நாடு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
கரீம் நடத்தி வந்த பயிற்சி மையத்தில் கேரள அரசு தேர்வாணையத் தேர்வு மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நடத்திய தேர்வின் கேள்வித் தாள்கள் சிக்கியுள்ளன. இது ஆய்வு செய்தவர்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்விலும் கூட, ஹைடெக் லெவலில் முறைகேடாக தேர்வு எழுத எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார் சபீர் கரீம்.
இதைதொடர்ந்து சபீர் கரீம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ். தேர்வில் மோசடி செய்த ஐ.பி.எஸ்.அதிகாரி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.