
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டையில் ஜெ.தீபா பேரவையின் விளம்பர பதாகைகளை, ஏற்றிச் சென்ற மினிவேனுடன் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை - மன்னார்குடி சாலையில் சென்றுக் கொண்டிருந்த மினிவேனில் ஜெ.தீபா பேரவையின் விளம்பர பதாகைகள் இருந்தன.
இதை பார்த்த முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் காவலாளர்காள் அந்த மினி வேனை வழிமறித்தனர்.
இந்த பதாகைகளை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டனர். அப்போது முத்துப்பேட்டை நகரில் 10 இடங்களில் வைப்பதற்காக விளம்பர பதாகைகளை கொண்டு செல்வதாக மினிவேனில் வந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து விளம்பர பதாகைகள் வைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி விளம்பர பதாகைகளையும், அதை ஏற்றிச் சென்ற மினிவேனையும் முத்துப்பேட்டை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மினிவேன் மற்றும் விளம்பர பதாகைகள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதனிடையே ஜெ.தீபா பேரவையினர், பேனர் வைப்பதற்கு காவலாளர்களிடம் உரிய அனுமதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து மினிவேனும், விளம்பர பதாகைகளையும் ஜெ.தீபா பேரவையினரிடம் காவலாளர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.