இரட்டை இல்லை சின்னம் விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகர் ரூ1.30 கோடி பணத்துடன் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுகேஷை விசாரணைக்காக 8 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்திரசேகரிடம் பேசவில்லை எனவும், யாரிடமும் பணம் கொடுக்கவிலலை எனவும் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கைதான சுகேஷ் சந்திரசேகர் ரூ1.30 கோடி பணத்துடன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி முன் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகேஷை விசாரணைக்காக 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.