"சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில்" - கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!!

First Published Aug 5, 2017, 11:34 AM IST
Highlights
temple building by occupy the road


சென்னை அண்ணா நகர் அருகே கலெக்டர் நகர் அடுத்த முகப்பேர் பகுதி, பஜார் தெருவில் ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. இப்பகுதி எந்நேரமும் பரபரப்புடன், போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.

மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் பெருகி 80 அடி கொண்ட சாலை தற்போது 45 அடியாக சுருங்கிவிட்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக அவசர நேரத்துக்கு தீயணைப்பு வாகனமோ, ஆம்புலன்சோ செல்ல முடியாத நிலையில் இந்த சாலை குறுகிவிட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் நடந்து செல்லவே கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் ஒரு கோயில் இருந்து வந்தது. நாளடைவில், இந்த கோயிலை விரிவுப்படுத்தி கட்டி வருகின்றனர். இதற்காக சாலை நடைபாதையை ஆக்கிரமித்ததுடன், தெரு பெயர் பலகையையும் விட்டு வைக்காமல், சிலர் கோயிலை கட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள், மாநகராட்சி உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் இந்து அமைப்பினர் சிலர், தங்களது கொடி கம்பத்தை அங்கு வைத்துள்ளனர். இதனால், போலீசில் புகார் செய்தாலும், இது அரசியலாக மாறிவிடும். எதற்கு உங்களுக்கு இந்த வம்பு என போலீசாரே அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

மேலும், தற்போது இந்த கோயிலை விரிவு படுத்தி, மீண்டும் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன், இதே தெருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு, விதிகளை மீறி அந்த கட்டிடம் கட்டியதாக தெரிவித்தனர். சொந்த இடத்தில் கட்டிய கட்டிடத்துக்கே விதிகளை மீறிய செயல் என கூறும் மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கோயிலை கட்டி, அரசியல் நடத்தி வருவதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

click me!