
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். உடல்நலக்குறைவால் தந்தை இறந்துவிட்ட நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலித்த பையன் பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்கா செல்போனை எடுத்து காதலனுக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து நைலான் புடவையால் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி கூச்சலிட்ட படியே கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது அக்காவுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ரொம்ப சாரி அக்கா. அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ கா, உங்க கிட்டலாம் சொல்லாம போறன் சாரி. அவங்க அம்மா, அக்கா, அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம். என்னால தான உனக்கும், அம்மாவுக்கும் இவ்ளோ அசிங்கம், நான் சாக போறன் கா எனக்கு இருக்கவே புடிக்கல. இருக்க கூடாது இப்பவே செத்துடணும்னு தோணுதுக்கா. என் சாவுக்கு அவங்க குடும்பம் மட்டும்தான் கா காரணம் என பேசியுள்ளார். இதை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.