காவல் ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் - திமுக எம்.பிக்கள் தேர்தல் ஆணையரிடம் மனு...

First Published Mar 16, 2017, 5:44 PM IST
Highlights
Teaching mathematics should be transferred to the Commissioner of Police - DMK MPs petition to Election Commissioner


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறையாக நடைபெற சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக எம்.பிக்கள் டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிளவடைந்தது.

இதையடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்த கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பினர் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது எனவும், அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற முறையே இல்லை என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

இதற்கான விளக்கங்களும் கோரிக்கைகளும் நிறைவு பெற்ற நிலையில், வரும் 20 ஆம் தேதிக்குள் சசிகலா நியமனம் குறித்து இறுதி முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் இரட்டை இல்லை சின்னம் தங்களுக்கு ஒதுக்குவது குறித்தும் ஒ.பி.எஸ் தலைமையிலான அணியினர் நேற்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து பேசினர்.

இதைதொடர்ந்து சசிகலா தரப்பு ஆதரவாளரான தம்பிதுரை தலைமையிலான 10 பேர் அடங்கிய குழு இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது சசிகலா நியமனம் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியுடன் திமுக எம்பிக்களான திருச்சி சிவா, டிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி சந்தித்து பேசினர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாகவும் நியாயமான முறையில் நடைபெற  சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பின்னர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் முறையை ஆர்.கே.நகரில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.

click me!