ஆசிரியர் பகவான் பணிஇட மாறுதல் ரத்து… பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு… கொண்டாடி மகிழும் மாணவர்கள்….

First Published Jun 26, 2018, 1:27 PM IST
Highlights
teacher Bhagavan transfer order cancel


மிகச் சிறந்த  நண்பராகவும், ஆசிரியராகவும் விளங்கிய திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வெளியகரம் பள்ளி மாணவ-மாணவிகளின் பாசப் போராட்டத்துக்கு தற்போது முழு வெற்றி கிடைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.

இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.

இது குறித்து ஊடகங்களில்  செய்தி வெளியானதையடுத்து  பகவானின் இடமாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். 10 நாட்கள் மட்டும் அங்கே பணிபுரிய அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் வெளியகரம் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், அந்த ஊர் பெற்றோர்கள் என அனைவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அனைத்துத் தரப்பினரும் ஆசிரியர் பகவான் தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே பணி புரிய அனுமதிக்க வேண்டும் என வலிறுத்தினர். இதையடுத்து பகவானின் இட மாறுதல் உத்தரவை இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்துள்ளது.

இந்த ரத்து ஆணை கிடைத்தவுடன் அந்த பள்ளிக்கூடமே கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். மாணவர்கள் மீது கொண்டுள்ள அக்கறை, அவர்களை நல்வழிப்படுத்துதல் போன்றவற்றை ஒருவர் மிகச் சரியாக கடைப்பிடிக்கும் போது எந்த ஆசிரியரும் மாணவர்களின் அன்புச்  சிறைக்குள் கண்டிப்பாக அகப்பட்டுக் கொள்வார்கள் என்பதிற்கு பகவான் ஒரு உதாரணம்.

click me!