
சென்னையில் மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாடிய வழக்கில் மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க மாதவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு முதன்மையான வருமானமே டாஸ்மாக் மூலம் தான் வருகிறது. ஆனாலும் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக தொடர்ந்து ஆண்டாண்டுகளாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் மாதாவரம் டாஸ்மாக் கடையில் வாடிக்கையாளர் தேவராஜன் மது வாங்கி இருக்கிறார். அவரிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனையாளர் 10 ரூபாய் வசூலித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக தன்னிடம் வாங்கியதாக, ரூ.1 லட்சம் இழப்பீடு கோரி தேவராஜன் என்பவர் சென்னை, நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது என்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி மாதாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மனுதாரருக்கு கடை விற்பனையாளர் இழப்பீடாக ரூ.5000 வழங்க வேண்டும் என்றும், உரிய காலத்தில் வழங்கத் தவறும் பட்சத்தில் இழப்பீட்டு தொகையை 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.