நாகப்பட்டினம்
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் கூறினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன்.
அப்போது அவர் கூறியது:
“மருத்துவ கல்லூரியில் சேர முடியாத விரக்தியால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறுவது தவறு.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை, மாணவி அனிதா தனது இறப்பின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தமிழகத்துக்கு நீட் வராது என உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.