கட்டண உயர்வில் அடம்பிடிக்கும் தமிழக அரசு; தொடர் போராட்டங்களால் அடங்க மறுக்கும் மாணவர்கள்...

First Published Jan 25, 2018, 8:05 AM IST
Highlights
Tamil Nadu Government tariff hike Students protests ...


விருதுநகர்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விருதுநகரில் சாலை மறியல், பேருந்து சிறைப்பிடிப்பு போன்ற போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடி என்று கூறி சமீபத்தில் பேருந்துக் கட்டணங்களை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அரசாணை  வெளியிட்டது. இதனால், பேருந்துகளை நம்பி இருக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானதோடு அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் ஏழை,எளிய  மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறி தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின்  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, அரசுப் பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி விருதுநகர் செந்திக்குமாரா நாடார் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் நேற்று விருதுநகர் - அருப்புக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல் ஆய்வாளர் (பொ) சம்பத் தலைமையிலான காவலாளர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாணவர்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேபோன்று, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

click me!