நியாயவில்லைக்கடைகளில் உணவு பொருட்களின் எடை குறைவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், இதனை சரி செய்யும் வகையில் இனி பாக்கெட்டில் அரிசி மற்றும் சக்கரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடையில் உணவு பொருட்கள்
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி பேருக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள் வெளியில் விற்கப்படும் உணவு பொருட்களை விட குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
பச்சரிசி,புழுங்கல் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் நியாய விலைக்கடைகளில் சரியான அளவு எடையில் பொருட்கள் வழங்கப்படவில்லையென்றும். எடை அளவு குறைத்து மோசடி நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
பாக்கெட்டில் அரிசி, சக்கரை
அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதல் கட்டமாக தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.