அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு!

By Manikanda PrabuFirst Published Jan 14, 2024, 1:08 PM IST
Highlights

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos

அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின்  மனைவி துர்கா ஸ்டாலினை  ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. நிர்வாகிகள் நேரில் சந்தித்து அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில்  ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். மேலும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையும் அப்போது அவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கொடுத்தனர்.

இனி எல்லாத்துக்குமே ஒரே ஆப்: இந்திய ரயில்வே சூப்பர் திட்டம்!

திமுகவின் கொள்கைகளில் நாத்திகம் முக்கியமானது. ஆனால், துர்கா ஸ்டாலின் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டனர். தவறாமல் பூஜைகள் செய்து வழிபடும் அவர், பல்வேறு கோயில்களுக்கும் அவ்வப்போது செல்வார். இது பல்வேறு சமயங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்றவர்களது நம்பிக்கையில் தலையிடுவது அல்ல என்று  திமுகவின் கொள்கைகள் குறித்து பல முறை முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், திமுகவிலும் கடவுள் நம்பிக்கை கொண்ட பலர் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது எனவும், கட்சி சார்ந்த மத விழாவாக அதனை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக விழா என கூறி அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழை மரியாதையுடன் நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

click me!