Delimitation: தொகுதி மறுவரையறைக்கு 'நோ' சொன்ன தமிழகம்! 543 எம்.பி. சீட்களை மாற்றக்கூடாது என தீர்மானம்

Ganesh A   | ANI
Published : Aug 12, 2026, 01:03 PM IST
Tamil Nadu Assembly Passes Resolution to Freeze Lok Sabha Seats at 543 Opposing Delimitation

சுருக்கம்

Tamil Nadu Assembly : தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை 543 ஆகவே வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை அன்று ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் விஜய், "33% மகளிர் இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது. வரும் 2029 மக்களவைத் தேர்தலிலேயே, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையில் அதை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது ஒரு சலுகை அல்ல; அது சமூக நீதி. எனவே, 33% மகளிர் இடஒதுக்கீட்டை எந்த தாமதமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மூலம், மத்திய அரசுக்கு தமிழக அரசு சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளது. அவை:

* மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை இப்போது இருப்பது போலவே 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும்.

* மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை இடப்பங்கீட்டை தற்போதைய விகிதாச்சார அடிப்படையிலேயே தொடர வேண்டும்.

* மக்கள் தொகைக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தை மாற்றக்கூடாது.

* மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அமலுக்கு வரும் முன்பே, வரும் 2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீட்டை தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

ஆதரித்த திமுக

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றி கழக அரசின் இந்த தீர்மானத்திற்கு தனது கட்சியின் முழு ஆதரவையும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "தொகுதி மறுவரையறையால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று இந்தியாவுக்கே முதலில் எடுத்துச் சொன்ன இயக்கம் திமுக தான். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு. இதன் பெயரால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு," என்றார்.

தீர்மானத்தின் அம்சங்களை வரவேற்ற அவர், "மக்களவையில் தமிழ்நாட்டுக்கான 7.18 சதவீத இடஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி, தொகுதி மறுவரையறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு குறித்த தீர்மானத்தையும் வரவேற்கிறோம்," என்று குறிப்பிட்டார்.

ஆனால், இந்த தீர்மானத்திற்கு அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் தீர்மானத்தின் நோக்கம் மற்றும் கொண்டுவரப்பட்ட நேரம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இது தமிழக வெற்றி கழக அரசின் ஒரு "அரசியல் நாடகம்" என்று குற்றம் சாட்டினார். "தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போவதாக மத்திய அரசிடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழக வெற்றி கழக அரசு இந்தத் தீர்மானத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளது. இது அரசியல் காரணங்களுக்காகவும், இந்த விஷயத்தில் தேவையற்ற பரபரப்பை உருவாக்கவும் செய்யப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம்," என்று இபிஎஸ் கூறினார்.

மேலும், இந்த தீர்மானத்தை தற்போதைய வடிவில் எதிர்த்தாலும், தொகுதி மறுவரையறை நியாயமாக கையாளப்பட்டால், அதன் நிர்வாக வசதியை தனது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். "நிர்வாக வசதிக்காக, அதிக வாக்காளர்களைக் கொண்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை வாக்காளர் எண்ணிக்கை மற்றும் புவியியல் பரப்பின் அடிப்படையில் பிரிப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அரசு இந்த தொகுதி மறுவரையறைப் பணிகளை தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் தற்போதைய 7.18 சதவீத விகிதத்திற்குக் கீழே குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

முழுத் தீர்மானத்தை எதிர்த்தாலும், மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு தனது கட்சி ஆதரவு தருவதாக இபிஎஸ் உறுதிப்படுத்தினார். "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிக்கிறது," என்றார். இதேபோன்ற கருத்தை தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்தும் முன்வைத்தார். "தொகுதி மறுவரையறை தொடர்பான எந்தவொரு சட்ட முன்வடிவையும் மத்திய அரசு கொண்டு வராத நிலையில், இந்த சிறப்புத் தீர்மானம் எந்த அடிப்படையில் பொருத்தமானதாக இருக்கும்? எனவே, இந்தத் தீர்மானத்தின் அவசியத்தை நாங்கள் இப்போது உணரவில்லை," என்று கூறிய அவர், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்த பாஜக எம்.எல்.ஏ எம். போஜராஜன், இந்த செயல்முறையை ஒரு இயல்பான மாற்றமாக கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். "மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள், அதனால்தான் நீங்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறீர்கள். காலம் செல்லச் செல்ல, தேவையான மற்றும் நேர்மறையான மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்," என்றார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைந்துவிடக் கூடாது என்பதைப் பாதுகாப்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo Emergency Landing: நடுவானில் பழுதான இன்ஜின்! சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்
சட்டைப் பையில் படம்... நெஞ்சுக்குள்ள விசுவாசம்? சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் 'போட்டோ' மோதல்!