நாமக்கல்
ஊருக்கு தார்சாலையை போடாவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளம் ஊராட்சி பணங்காட்டில் இருந்து போதமலை அடிவாரம் செந்தலாங்குட்டை வரை ஏற்கனவே இருந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி ரூ.13 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் நடந்தன. அப்போது நில அளவீட்டில் தவறு நடந்திருப்பதாக கூறி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் சாலை போடும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தார்சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று 50–க்கும் மேற்பட்ட மக்கள் இராசிபுரம் காவல் நிலையத்திற்கு திரண்டுச் சென்று மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “ஊராட்சி நிர்வாகத்தின் பல்வேறு பணிகள், குறிப்பிட்ட சில தனி நபர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது. தார்சாலையை போடவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட காவலாளர்கள், “உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினர்.