“48 மணி நேரத்தில் சார்-பதிவாளரை கைது செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்றம் “அதிரடி” உத்தரவு

First Published Jan 5, 2017, 1:40 PM IST
Highlights


முறைகேடாக பத்திரப் பதிவில் ஈடுபட்ட சார்-பதிவாளரை 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுபிதா (40). மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘என் தந்தைக்கு சென்னை, கொடைக்கானல், தேனி உள்பட பல இடங்களில் சொத்துகள் உள்ளன. அவர் கடந்த 2015 அக்டோபரில் காலமானார்.

அவர் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரது கைவிரல் ரேகையை பதிவு செய்து, அவரது சொத்துகள் அனைத்தையும் என் தாயார் மாரியம்மாள், சகோதரர் சக்திகுமார் ஆகியோர் அபகரித்து கொண்டனர்.

அந்த ஆவணங்கள் மூலம் எனது தந்தையை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லாமல், 2015 அக்டோபர் 9ம் தேதி நீலாங்கரை சார் பதிவாளர், அவர்களது பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதில் மோசடி நடந்துள்ளது. அதற்கு சார்- பதிவாளரும் உடந்தை” என அதில் கூறப்பட்டு இருந்தது.

நீதிமன்ற உத்தரவுபடி, நீலாங்கரை சார்-பதிவாளர் தாமு உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சக்திகுமாரை, போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது சிவில் வழக்கு என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சக்திகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், ‘‘ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீலாங்கரை சார்- பதிவாளரான தாமு, தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அந்த பத்திரப்பதிவு இறந்தவரின் வீட்டில் வைத்து நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், பத்திரப்பதிவு முறைகேடாக பத்திரப்பதிவு அலுவலகத்தில்தான் நடந்துள்ளது’’ என்றார்.

அதையடுத்து சார்-பதிவாளரை 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 24-க்கு தள்ளி வைத்தார்.

click me!