தமிழகத்தில் வேலை கிடைக்காமல் 1316 பேர் தற்கொலை – அன்புமணி ''பகீர்'' தகவல்

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
தமிழகத்தில் வேலை கிடைக்காமல் 1316 பேர் தற்கொலை – அன்புமணி ''பகீர்'' தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் வேலை கிடைக்காமல் படித்த பட்டதாரிகள் 1316 பேர் தற்கொலை செய்து இறந்துவிட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்பு ‘பகீர்’ தகவலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி கொண்டிருக்கிறது.
வளர்ச்சி சார்ந்த வி‌ஷயங்களில் இந்தியாவில் கடைசி இடத்தை பிடிக்கும் தமிழகம், விபத்துக்கள், தற்கொலைகள், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட எதிர்மறையான வி‌ஷயங்களில் மட்டும் தான் தேசிய அளவில் முதலிடத்தை பிடிக்கிறது.
2015ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் தமிழகம் தான் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 69,059 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் மொத்தம் 79,746 பேர் காயமடைந்தனர்; 15,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில நெடுஞ்சாலைகளில் 3000க்கு மேற்பட்ட மதுக்கடைகள் இருப்பது தான் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களுக்கும், இறப்புகளுக்கும் காரணமாகும்.

2015ம் ஆண்டில், வேலை வாய்ப்பற்றோரின் தற்கொலை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் பிடித்திருக்கிறது. அந்த ஆண்டில் 963 ஆண்கள், 353 பெண்கள் என மொத்தம் 1316 வேலை வாய்ப்பற்றவர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2011ம் ஆண்டில், வேலையின்றி இருந்த 358 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2012ம் ஆண்டில் 211 பேர், 2013ம் ஆண்டில் 226 பேர், 2014ம் ஆண்டில் 312 பேர் என நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1107 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆனால், 4 ஆண்டுகளின் மொத்த தற்கொலைகளையும் விஞ்சும் வகையில் ஒரே ஆண்டில் 1316 வேலை வாய்ப்பு இல்லாதவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியிருப்பதில் இருந்தே அதன் மக்கள் நலச் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 83.50 லட்சம். ஒவ்வொரு ஆண்டும் வேலை கேட்டு சராசரியாக 15 லட்சம் பேர் பதிவு செய்கின்றனர். அவர்களில் இரு விழுக்காட்டினருக்கும் குறைவாகவே வேலை வழங்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 70 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்த நிலையில், ஒரு லட்சம் பேருக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!
பொங்கல் நாளிலும் இப்படியா? திமுகவின் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது! கொதிக்கும் அன்புமணி