அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெறலாம் – குலோத்துங்கன்…

First Published Jul 17, 2017, 8:41 AM IST
Highlights
If you are studying in Tamil school education in government school can easily win IAS exam - Kulothungan ...


அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெறலாம் என்று ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிப் பெற்ற அரியலூரைச் சேர்ந்த குலோத்துங்கன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அசோகன் - மல்லிகா. இவரது மகன் குலோத்துங்கன்.

பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றார். பின்னர் அவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., படிப்பும், கோவை வேளாண் கல்லூரியில் எம்.பி.ஏ. படிப்பு முடித்து விட்டு, தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாரானார்.

அண்மையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்.தேர்வில் தமிழக அளவில் 10 பேரில் ஒருவராக குலோத்துங்கன் தேர்ச்சிப் பெற்றார். இதனையடுத்து பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சார்பில் இவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைப்பெற்றது.

அப்போது குலோத்துங்கன் பேசியது:

“ஐஏஎஸ் அதிகாரிகளின் ஒரு கையெழுத்து இந்திய மக்களின் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்தது. அதனால்தான் இந்திய ஆட்சிப் பணியைத் தேர்வுச் செய்தேன்.

இந்தப் பணிமூலம் நமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யலாம் என்பதால் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்றேன்.

15 ஆண்டுகளுக்கு பிறகு என்னை உருவாக்கிய பொன்பரப்பி பள்ளிக்கு வந்தது பிறந்த வீட்டிற்கு வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில வழி கல்வியை கண்டு அஞ்சாதீர்கள், தமிழ் வழிக்கல்வியில் பயின்று தமிழக அளவில் 10 பேரில் ஒருவராக வெற்றிப் பெற்றேன்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பயின்று என்னால் ஐஏஎஸ் ஆக முடியும்போது மாணவர்களாகிய உங்களாலும் கண்டிப்பாக முடியும்.

அரசுப் பள்ளிகளில்தான் அடிப்படைக் கல்வி சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. அதனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றால் எளிதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெறலாம்

மாணவர் பருவத்திலேயே நீங்கள் என்னவாக வேண்டும் என்று திட்டமிட்டு சிறுசிறு தியாகங்கள் செய்து விடாமுயற்சியுடன் உழைத்தால் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்” என்ரு அவர் பேசினார்.

click me!