
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர் அடுத்துள்ள ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில்,சுமார் 1200 மாணவ- மாணவிகளும், 40ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதனிடையே பெற்றோர் ஆசிரியர் கழக நிதிக்கான கட்டணம் தொடர்பாக மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தூண்டிவிட்டு, பிரச்சனை செய்த வைத்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில், நேற்று காலை பள்ளி செயல்படத் தொடங்கியதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர். 11 ஆம் வகுப்பிற்குள் நுழைந்து போராட்டம் செய்ய வருமாறு அங்கிருந்த மாணவிகளை சில மாணவிகள் வற்புறுத்தியதாகவும் அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியர் இதனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் 5 பேர் அந்த ஆசிரியரை அடித்ததாக
கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை அழுதுகொண்டே தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் மாணவர்களின் மறியல் றித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை உடற்கல்வி ஆசிரியர் மீதும், தாக்கிய மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.
அதோடுமட்டுமல்லாமல், மாணவிகள் மூலம் பாலியல் புகார் அளித்துவிடுவதாக ஆண் ஆசிரியர்களையும், உறவினர்களை கொலை செய்துவிடுவதாக பெண் ஆசிரியர்களையும் மிரட்டுவதாகவும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்துவிடுவதாகவும் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தொடர்ந்து மிரட்டுவதாக புகார் கொடுத்தனர். எனவே உடற்கல்வி ஆசிரியர்
முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்ட முதன்மை கல்வி அலுவலர், எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்பேரில், ஆசிரியர்கள் அனைவரும் தனித் தனியே புகார் மனு அளித்துவிட்டு சென்ற நிலையில், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பள்ளியின் தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். இதனால் ஏதுவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, போலீஸார் பள்ளிக்கு
சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க ஆசிரியர் இல்லாமல் முற்பகல் முழுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியர் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தேர்வுகளை நடத்தினார். இதனிடையே நிலைமையை புரிந்த கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முற்றுகையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆசிரியரை தாக்கிய மாணவியை இடைநீக்கம் செய்வதாகவும், போராட்டத்தை தூண்டிவிட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தப்பின் ஆசிரியர் பள்ளிக்கு சென்றனர்.