தாய்-தந்தை தகராறால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை…

First Published Dec 1, 2016, 11:50 AM IST
Highlights


வெண்ணந்தூர் அருகே தாய்-தந்தைக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் தகராறால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு வேறேதும் காரணம் இருக்கிறதா? என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 49). இவருடைய மனைவி சுந்தரி (40). இவர்களுக்கு சக்திவேல், ரவிச்சந்திரன் என்ற மகன்களும், லோகாம்பாள் (18) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பச்சியப்பன் வேலை செய்து வந்தார். அவருடைய 2 மகன்களும் ஓட்டுநர் வேலைக்கு சென்று வந்தனர். லோகாம்பாள் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் பச்சியப்பன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனே அவரை மனைவி சுந்தரி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதேபோல் அவர்களின் 2 மகன்களும் வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது லோகாம்பாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பச்சியப்பனுக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதை மாணவி லோகாம்பாள் தட்டிக் கேட்டுள்ளார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட லோகாம்பாள் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே ஊருக்கு திரும்பிய பச்சியப்பன், சுந்தரி ஆகியோர் தங்களின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து மாணவியின் தற்கொலைக்கு வேறேதும் காரணம் இருக்கிறதா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!