
விழுப்புரம்
விழுப்புரத்தில் குடிநீர் தராததைக் கண்டித்து நாளை நடத்துவதாக இருந்த போராட்டத்தை போராட்டக்குழுவினர் கைவிட்டதாக அறிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கலர்புரம் கிராமத்தில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து நாளை (செவ்வாய்கிழமை) கலர்புரம் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினரை அழைத்து தாசில்தார் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போராட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு விஜய், பொருளாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள்,
திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரகுபதி, உதவி ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் மாரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், "குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தாசில்தார் உறுதியளித்தார்.
அதனை ஏற்று, "போராட்டத்தை கைவிடுகிறோம்" என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.