செம்பு பற்றி பேசுவதற்கு இதுவா நேரம்? கொலை பற்றி பேசுங்கள் சத்குரு...! நடிகர் சித்தார்த்த கண்டனம்

First Published Jun 28, 2018, 5:07 PM IST
Highlights
sterlite issue - siddharth condemns sadhguru


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாளின்போது, பயங்கர கலவரம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. 

யோகா கலை பயிற்சி அளிக்க யோகா குரு பாபா ராம் தேவ் லண்டன் சென்றபோது, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு, பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலைச் சந்தித்தேன். தேச கட்டுமானத்தில் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார செழிப்பை வைத்திருப்பதன் மூலமும், தேச கட்டுமானத்தில் பங்காற்றும் அவருக்கு மரியாதை செய்கிறேன். உலகளவில் உள்ள சதிகாரர்கள், தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் கிளச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள்தான் கோயில், தொழிற்சாலைகள் மூடியிருக்கக் கூடாது என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது,  அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஒரு தொழிற்சாலை இப்போது மூடப்பட்டு விட்டது. இது சரியானது அல்ல... இனிமேல, அப்பகுதியில் சுற்றுச்சூழல மாசு ஏற்படாதவாறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, அந்த விதிகளுக்கு அந்த தொழிற்சாலையை உட்படுத்த வேண்டும். அதற்கான வழிகள் இருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். இதுபோன்ற தொழில்களை நீங்கள் மூடிவிட்டால், இந்த நாட்டை எங்கே நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கூறியிருந்தார்.

ஜக்கி வாசுதேவ் கூறிய இந்த கருத்துக்கு எதிர் கருத்துகள் எழுந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில், மிகப்பெரிய தொழில்களை அழித்துக் கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவின் டுவிட்டைப் பார்த்த நடிகர் சித்தார்த், முதலமைச்சர் அலுவலகம் ஒரு வெட்கக்கேடு. பிரதமர் யோகாவை தவிர வேறு எது பற்றியும் பேச மாட்டார். காப்பர் உருக்குவதில் பலன்களைப் பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர். மக்களைச் சுடுவது கொலை ஆகும். கொலை பற்றி பேசுங்கள் என்று சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவுக்கு ஜத்குருவின் ஆதரவாளர்கள் சித்தார்த்தை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டியுள்ளனர். அதற்கு சித்தார்த் ரசிகர்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

click me!