வங்கியில் இஎம்ஐ செலுத்த 3 மாதம் அவகாசம் கொடுங்க... நிர்மலா சீதாராமனுக்கு அவரச கடிதம் எழுதிய ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Dec 14, 2023, 1:15 PM IST
Highlights

மிக்ஜாம்" புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
 

வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்‌ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வங்கியில் பாதிக்கப்பட்டோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Latest Videos

அதில்,   “மிக்ஜாம்" புயலினால் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்புநிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். 

கடனை செலுத்த முடியாத நிலை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பிற்குள்ளான பலர் / வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். எனவே  இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாக தெரிவித்துள்ளார். 

3 மாத கால அவகாசம் கொடுங்க..

அனைத்து வணிக வங்கிகள் கூட்டுறவு வங்கிகள். அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து கடன் தவணையையும் வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

வெள்ள நிவாரணம் டோக்கன் இன்று முதல் விநியோகம்! ரூ.6000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு! தொடங்கி வைக்கும் முதல்வர்!

 

click me!