நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துள்ளது.
பாக் நீரிணை பகுதியில் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் சிறைபிடித்து செல்வதை இலங்கைக் கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், அண்மையில் இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சில மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. கைது செய்வதும் பின்னர் விடுதலை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் பல சமயங்களில் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சார்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் பாண்டி, ரெமிஜிஸ், ஜார்ஜ், ரோமியோ, முருகன் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.