தூத்துக்குடி பிரச்சனைக்கு “ சமூக விரோதிகள் தான் காரணம்” என பொறுப்பில்லாமல் பேசியதுடன், போராட்டங்களையும் போராட்டகாரர்களையும், அவமானப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ரஜினி அளித்த பேட்டி, அவர் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் விஷயமாகவும் இது மாறி இருக்கிறது.
சமீபத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட, சத்யராஜ் மேடையில் பேசிய போது, ரஜினியையும் அவரது அரசியலையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் என்பது இரும்பு கரம் கொண்டு அடக்குவதாக இல்லாமல், அன்பு கரம் கொண்டு அடக்குவதாக இருக்கும். என கேலி செய்திருக்கிறார் சத்தியராஜ்.
மேலும் அவரிடம் மன அமைதிக்காக ரஜினி மேற்கொள்ளும் இமயமலை பயணம் குறித்து கேட்ட போது, மன அமைதியை தேடி மலைகளுக்கு செல்ல வேண்டியது இல்லை. பெரியார் கூறுவது போல தேடினால் எங்கும் மன அமைதி இருக்கிறது. நான் தினமும் மன அமைதியுடன் தான் பல் தேய்க்கிறேன், சாப்பிடுகிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார் சத்தியராஜ்.
மேலும் அவர் அரசியல் என்பது சமுதாய தொண்டு அதில் வரும் போது லாப, நஷ்ட கணக்கு பார்த்தால் சரிபட்டு வராது. அரசியலில் எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். போராட்டம், சிறைச்சாலை என எதையும் சந்திக்க நேரிடலாம். ஆன்மீக அரசியல் என்பது அப்படி அல்ல. என்னை பொருத்தவரை ஆன்மீக அரசியல் கூட ஒரு வகையில் வியாபாரம் தான் என தெரிவித்திருக்கிறார் சத்தியராஜ்.