
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தாம்பரம் - நெல்லை மார்க்கத்தில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே பேருந்து வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 12ம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக வரும் 11ம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும், 16ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 22ம் தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்குகிறது.
அதன்படி வரும் 12ம் தேதி காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல்12ம் தேதி இரவு 9.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி காலை 6.40 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.