சசிகலாவுக்காக சகல வசதிகளுடன் மாற்றப்பட்ட பரப்பன அக்ரஹாரா சிறை….பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்…..

First Published Jul 18, 2017, 6:22 AM IST
Highlights
special rooms for sasikala in bangalore jail


சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகளை பெற்றதாக எழுந்த புகாரில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பரபரப்பு  வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது..

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா  அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.



சிறையில் இருக்கும்  சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.



இந்நிலையில், கடந்த 10-ந் தேதி, பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆய்வு செய்தபின்பு, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறினார்.

இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இப்பிரச்சனை நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏய்படுத்தியது. இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விகாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில்தான்  சசிகலாவை சந்திக்க வருபவர்களுடன், அவர் பேசுவதற்காக தனி அறை , தூங்குவதற்கு வசதியாக ஒரு அறை,  தனி சமையல் அறை, அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறை என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தததாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் ஆங்கில  மற்றும் சில கன்னட தொலைக்காட்சி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.

சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக ரூபா தனது 2-வது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

click me!