
கோவை மாவட்டம் மதுக்கரையில் டெங்கு பரவும் வகையில் சுகாதார சீர்கேடுடன் இருந்ததால் ஏ.சி.சி. சிமென்ட் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மதுக்கரை சிறப்பு நிலை செயல் அலுவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டெங்குவால் பலர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிக பேர் உயிரிழந்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
நாட்டிலேயே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்தான். இதையடுத்து டெங்குவை பரப்பும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளாத வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் நிறுவன ஊழியர் விடுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, டெங்கு பரவும் வகையில் சுகாதார சீர்கேடுடன் இருந்ததால் ஏ.சி.சி. சிமென்ட் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மதுக்கரை சிறப்பு நிலை செயல் அலுவர் உத்தரவிட்டுள்ளார்.