கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை

By Velmurugan sFirst Published Mar 17, 2023, 4:28 PM IST
Highlights

கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோவை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஈரோடு திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது தென் தமிழகம் முதல் மத்திய பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 20ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான கோடை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக மேகத்தின் அமைப்பை பொறுத்து தான் ஆலங்கட்டி மழை பெய்யும்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை,  காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரி மாவட்டம் பெருஞ்சாணி, புத்தன் அணையில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை, மதுரை, தரும்புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் சற்று குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

click me!