"ஸ்மார்ட்போன்களில் விஷ வாயுக்கள் வெளியேற்றம்': ஆய்வில் அதிர்ச்சி தகவல்

First Published Oct 23, 2016, 2:49 AM IST
Highlights


ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால், விஷவாயுக்கள் நூற்றுக்கணக்கில் வெளியேறுவதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. உணவு, தண்ணீர், வாகனம் எது தேவையானாலும் செல்போன் எடுத்தால் போதும் வீட்டை தேடி வரும் அளவுக்கு, இன்றைய நிலை மாறிவிட்டது.

இதையொட்டி அனைத்து தரப்பு மக்களும், ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்துகின்றனர். கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனால், ஸ்மார்ட் போன்களுக்கு தனி மவுசு உள்ளது.

இந்நிலையில், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதன் மூலம், நூற்றுக்கு மேற்பட்ட விஷ வாயுக்கள் வெளியேறுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் என்.பி.சி. டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விவரம் வருமாறு.

பலமுறை சார்ஜ் செய்யும் திறனுள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்துவதைப் பல நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. செல்போன் முதல் வாகனங்கள் வரை லித்தியம் அயன் வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம் அயன் பேட்டரி அடிப்படையில் செயல்படும் செல்போன்களை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

50 சதவீதம் சார்ஜ் செய்த பேட்டரி வெளிப்படுத்தும் விஷ வாயுவை விட முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் இருந்து அதிகளவு விஷ வாயு வெளியேறுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
மேலும், பேட்டரிகளில் உள்ள ரசாயனப் பொருள்களும், அவை சார்ஜ் பெற்ற பின்னர் மின் சக்தியை வெளியேற்றும் போதும் விஷ வாயுக்கள் வெளியேறுகின்றன. ரசாயனங்களின் தன்மைக்கு ஏற்பவும், அவை பேட்டரியில் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொருத்தும், விஷ வாயு வெளியேறுகிறது.

அவ்வாறு வெளியேறும் விஷ வாயுக்களின் பெயர்கள், அவை வெளியேறுவதற்கான காரணம் ஆகியவை அறிந்து கொள்வதன் மூலம் அவற்றின் வெளியேற்றத்தை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கார்பன் மோனாக்ஸைட் உள்ளிட்ட மிக ஆபத்தான விஷ வாயுக்கள் லித்தியம் அயன் பேட்டரிகளில் இருந்து வெளியேறுகின்றன. கார், விமானம் போன்ற குறுகிய இடங்களில் அதிகளவிலான விஷவாயுக்கள் வெளியேறுவதால் கண், சரும எரிச்சல், மூக்கு அரிப்பு போன்ற உபாதைகள் முதல் சுற்றுச்சூழலுக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும்.

இந்த ஆய்வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவை தீப்பிடிக்கும் அளவுக்கு சுட வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் விஷ வாயுக்களை வெளியேற்றின.

பல பேட்டரிகள் சூடு தாங்காமல் வெடித்தன. நமது அன்றாட வாழ்வில் கூட, பேட்டரியில் பழுது காரணமாகவோ, அதிக உஷ்ணம் காரணமாகவோ தீப்பிடிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று

கருதப்படுகிறது. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் "நேனோ எனர்ஜி' ஆய்விதழில் வெளியாகியுள்ளன.

click me!