கடலூர்
விருத்தாசலத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன், புழுக்களு கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி சார்பில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்த வார்டுக்கு உட்பட்ட என்.பி.கே. தெரு மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே, அப்பகுதி மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை நகராட்சி நிர்வாகம் மூலம் விநியோகப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடனும், புழுக்களுடனும் வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் வெற்றுக் குடங்களுடன் திரண்டு மறியல் செய்தனர்.
அவர்கள், "சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்" என்று கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.