"சிவாஜி சிலை அகற்றம்... தமிழர்களுக்கு நேர்ந்த அவமானம்" - சீமான் ஆவேசம்!!

First Published Aug 4, 2017, 3:32 PM IST
Highlights
seeman angry talk about sivaji statue removal


சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு நேர்ந்த அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து சிவாஜியின் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ராட்சத கிரேன்கள் கொண்டு அகற்றப்பது. தற்போது இந்த சிலை அடையாறில் கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,

தமிழ்ப் பேரினத்தின் தனிப்பெருங்கலை அடையாளமாகத் திகழ்பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது திருவுருவச் சிலையை அதிக அளவில் காவல்துறையைக் குவித்து, இரவோடு இரவாக மெரினா கடற்கரைச் சாலையிலிருந்து அகற்றியிருக்கிறார்கள். 

இது, சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு நேர்ந்த அவமானமில்லை. அவர் குடும்பத்துக்கு நேர்ந்த அவமானமில்லை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம். 

தமிழர்களின் உணர்வினை மதித்து, அகற்றப்பட்ட நடிகர் திலகத்தின் சிலையை மெரினா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறேன். அப்படி தவறும்பட்சத்தில், தமிழர்களின் அடையாளங்களை மறைத்தழித்த படுபாதக செயலுக்குத் துணைபோன வரலாற்று பெரும்பிழை, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வந்து சேரும் என எச்சரிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

click me!