Students scholarship:மாணவர்களுக்கு உதவி தொகை.. மாதந்தோறும் 1000 ரூபாய்.. விண்ணப்பிப்பது எப்படி.? முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Jan 12, 2022, 4:00 PM IST
Highlights

நாடு முழுவதும்  மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வரும் என்எம்எம்எஸ் தேர்வானது இந்த ஆண்டும் மார்ச மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய என்எம்எம்எஸ் என்னும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு  ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கெனத் தனி பாடத்திட்டம் எதுவுமில்லை. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மன திறன் சோதனை (MAT)மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு குறித்து, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2022 மார்ச் மாதம் 05-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை  எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. 

இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இவைதவிர பொதுவான அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,  தேர்வர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 

click me!