விவசாயம் காப்போம்! திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்; 

First Published May 5, 2018, 12:20 PM IST
Highlights
save agriculture Awareness trip to motorbike from Tiruvannamalai to Kashmir


திருவண்ணாமலை 

விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலை முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு வீரக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (25), என்ஜினீயரிங் முடித்துவிட்டு படவேட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். 

இவர், "விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்" என்று நேற்று மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ராதாகிருஷ்ணனும் சென்றார்.

இந்த பயணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயணம் திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை 30 நாட்களுக்குள் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
காஷ்மீரில் இருந்து திரும்பி வரும்போது புதுடெல்லியில் வேளாண் மத்திய மந்திரியை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார் ராஜ்குமார்.

இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ‘படவேடு பகுதியை சேர்ந்த இவர்கள் திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை விவசாயத்தை காப்பாற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 30 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். 

மாவட்டத்தில் 3 இலட்சத்து 80 ஆயிரம் எக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் தான் அதிகப்படியாக விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள மாவட்டமாகும்.

ராஜ்குமார் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னோடியாக பொது நலன் கருதி ஆர்வத்துடன் இந்த பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 
 

click me!