ஆளும் கட்சியினர் அராஜகம்; துணைபோகும் தேர்தல் அதிகாரிகள் - இதுதான் உங்கள் நேர்மையா? திமுகவினர்  போராட்டம்...

First Published Apr 3, 2018, 7:56 AM IST
Highlights
ruling party is atrocity stand with Election Officials - dmk Struggle ...


பெரம்பலூர்

கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அதற்கு தேர்தல் அதிகாரிகள் துணை போகின்றனர் என்றும் குற்றம்சாட்டி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம், காரை, பூலாம்பாடி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று முதற்கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. 

இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் துணை நிற்கிறார்கள் என்று திமுகவினர் குற்றம்சாட்டினர்.

மேலும், நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்தும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்தும்" முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், "பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இங்கு நேரில் வர வேண்டும். அப்போதுதான் அவரிடம் கோரிக்கைகளை எடுத்துரைத்து தேர்தல் முறைகேடுகள் குறித்து முறையிட முடியும்" என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர். 

பின்னர், பெரம்பலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார், பெரம்பலூர் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி உள்பட காவலாளர்கள் வந்து திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். தொடர்ந்து அதிகாரிகளின் செயல்பாடுகள் நடு நிலைமையாக இல்லாவிடில் அடுத்தகட்டமாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தி.மு.க.வினர் எச்சரித்தனர். 

இந்தப் போராட்டத்தில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிசந்திரன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
 

click me!