ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வேண்டும் - தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை...

First Published Apr 16, 2018, 8:12 AM IST
Highlights
Rs 15 thousand relief amount - Fishermen request Tamil Nadu government


நாகப்பட்டினம்

மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதையொட்டி ரூ.15 ஆயிரம் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, இந்த வருடத்திற்கான மீன்பிடி தடை காலம் நேற்றுத் தொடங்கியது. இந்த மீன்பிடி தடைக் காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவற்றில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. சிறியவகை படகுகள் மட்டும் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

இந்த மீன்பிடி தடை காலம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். 

இந்த நிலையில, "45 நாட்களாக இருந்த மீன்பிடி தடை காலம் கடந்தாண்டு முதல் 60 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
 

click me!