ரயில்வே துறையில் லோகோ பைலட் மற்றும் குரூப்-டி பணிக்கான தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்வே துறையில், லோகோ பைலட் மற்றும் குரூப்-டி நிலைககான 32,438 காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு இன்று (19.03.2025) தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தேர்வு கடைசிக் கட்டத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஆர்.ஆர்.பி. தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற இருந்தது. ஆனால், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. சில தேர்வு மையங்களில் மட்டும் தேர்வு ரத்தாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வர் பிரச்சனையால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர் என்று சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தேர்வை எழுதுவதற்காக அண்டை பலர் அண்டை மாநிலங்களில் இருந்துகூட வெகுதூரம் பயணித்து வந்திருக்கின்றனர்.
தேர்வு ரத்து என அறிவிப்பு வந்ததும் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் தேர்வுக்காக ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் அமைக்காமல் வெளி மாநிலங்களில் அமைத்ததற்கு கடும் கண்டனம் எழுந்தது.
சற்றும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மன உளைச்சலைக் ஏற்படுத்துவதாக தேர்வர்கள் கூறுகின்றனர். தமிழகதிதன் தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தேர்வர்கள் சுமார் 1000 கி.மீ. தொலைவுக்குப் பயணித்து இந்தத் தேர்வை எழுதச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தேர்வு ரத்து என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு சீக்கிரம் நடத்தப்பட வேண்டும் என்றும் விரைந்து மறுதேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்துகின்றனர்.