நாமக்கல்
மக்களுக்கு விற்பனை செய்யும் சாலையோர பழச்சாறு கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் நடத்துபவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "இன்னும் சில தினங்களில் கோடைகாலம் தொடங்க இருப்பதால் மக்கள் அனைவரும் குளிர்பானங்கள், பழவகைகள் அதிகம் பயன்படுத்துவார்கள்.
எனவே, மக்களுக்கு விற்பனை செய்யும் சாலையோர பழச்சாறு கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் நடத்துபவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.
மேலும், மக்கள், பயன்பாட்டிற்காக வாங்கும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை காலாவதி தேதி பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழ ஜுஸ் கடைகளை நடத்தி வருபவர்கள் பொதுமக்களுக்கு தரமான, காலாவதி ஆகாத, பயன்படுத்த உகந்த மூலப் பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களுக்கு தரமான மற்றும் பயன்பாட்டிற்கு உகந்த குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதற்கு ஏதுவாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழஜுஸ் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழசாறு கடைகளை நடத்துபவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு கட்டாயம் பெற்று கடையில் வைத்து இருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆய்வின்போது உரிமம் மற்றும் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். தவறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் சந்தேகப்படும்படியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.