
விழுப்புரம்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் நிவாரண நிதியில் ரூ.14 இலட்சத்தை தனது வங்கி கணக்கிலும், தன்னுடைய மனைவியின் வங்கி கணக்கிலும் வரவு வைத்த வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரண நிதியை விழுப்புரம் தாலுகாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில், "உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூரில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விழுப்புரம் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த அன்புபாலன் (43).
இவர் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை வருவாய் உதவியாளராக பணியில் இருந்தார்.
அப்போது விபத்து நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக போலி கணக்கு எழுதி தனது வங்கி கணக்கிலும், தன்னுடைய மனைவி கலைச்செல்வியின் வங்கி கணக்கிலும் அந்தப் பணத்தை வரவு வைத்துள்ளது" தெரியவந்தது.
இவ்வாறாக ரூ.14 இலட்சத்து 10 ஆயிரத்தை அன்புபாலன் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் அன்புபாலனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உத்தரவிட்டார்.
இந்த கையாடல் குறித்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, மாவட்ட குற்றப் பிரிவு காவலர்களிடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்பேரில் அன்புபாலன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மீது குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளி மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று அன்புபாலனை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.