திண்டுக்கல்
கடும் வறட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் மக்கள் வேலைத் தேடி வெளியூருக்கு செல்கின்றனர். எனவே, பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் திரளாக கூடி கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பாளையம் பேரூராட்சி பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. எனவே, அப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலைத் தேடி வெளியூர் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி குஜிலியம்பாறை ஒன்றியம் பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளை சேர்ந்த மக்கள், விவசாய சங்கத்தினர் தலைமையில் கோரிக்கை மனுக்களுடன் நேற்று குஜிலியம்பாறை காளியம்மன் கோவில் முன்பு கூடினர்.
பின்னர, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள், பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில், “கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுவது போல், பேரூராட்சி பகுதியிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.
பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான மக்கள் திரண்டதால் பரபரப்பானது.