இறந்தவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி...! அலறி அடித்து ஓடிய கிராம மக்கள்..!

By Ajmal KhanFirst Published Apr 5, 2022, 12:27 PM IST
Highlights

இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்து, சடங்குகள் செய்த நிலையில், இறந்தவர் திடீரென உயிருடன் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி  வந்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

தந்தை காணவில்லை தேடிய மகன்கள்

ஈரோடு மாவட்டம் புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, இவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் இல்லாத நாட்களில் கரும்பு வெட்டும் பணிக்கு  கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம், இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கரும்பு வெட்டும் பணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு இடங்களிலும், கரும்பு வெட்டும் இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால்  மூர்த்தியை தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்நிலையத்திலும் மூர்த்தி காணவில்லையென உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.

உடலை அடக்கம் செய்த உறவினர்கள்

இந்தநிலையில்  கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பேருந்து  நிலையம்  பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக மூர்த்தியின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரின் உடலை பார்த்த மூர்த்தியின் மகன்கள் இறந்தது தங்களது தந்தை தான் எனக்கூறி உடலை பெற்று சென்றுள்ளனர்.இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் உடலை மூர்த்தியின் மகன்களிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டிற்கு கொண்டு சென்று முறைப்படி இறுதி சடங்குகளையும் செய்துள்ளனர்.  
இந்நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு புஞ்சைதுறையம் பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு மூர்த்தி வந்துள்ளார். இதனை பார்த்த மூர்த்தியின் உறவினர்கள் அச்சம் மற்றும் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு இறந்தவர் திரும்பி வந்ததால் அச்சமடைந்து செய்வதறியாமல் உறவினர்கள் திகைத்து இருந்துள்ளனர்.


இறந்தவர் திரும்பி வந்தார்?

இதனை பார்த்த மூர்த்தியும்  ஒன்றும் தெரியாமல் முழித்துள்ளார். அப்போது தனது வீட்டில் தனது உருவபடத்திற்கு மாலை அணிவித்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தியிடம் குடும்பத்தினர்  தகவல் தெரிவித்துள்ளனர். வெளியூருக்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கு அதிகமான பணிகள் இருந்ததால் உடனடியாக திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டதாக மூர்த்தியும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினரிடம் காணமல் போன மூர்த்தி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த  போலீசார் மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இறந்த நபர் யார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குழப்பத்தில் போலீசார் உள்ளனர். இதனையடுத்து அடக்கம் செய்த நபரின் உடலை தொண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


 

click me!