ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்குக: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

By Manikanda PrabuFirst Published May 2, 2024, 9:39 PM IST
Highlights

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்க வேண்டும் என ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்ககத்தின் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதியை தொடர்ந்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்ககத்தின் இயக்குநரிடம் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ள விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், இதுதொடர்பாக அவருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக்டோபர் 2018 இல் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு  மையத்தை நிறுவியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறையில் 8000 பனை ஓலைச் சுவடிகளும் (தமிழ் மற்றும் பிற மொழிகளில்) மற்றும் 7200 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளும் உள்ளன. டிசம்பர் 2023க்குள், 3438 ஓலைச் சுவடிகளையும் 14 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளையும் அந்த மையம் வெற்றிகரமாகப் பாதுகாத்தது. இருப்பினும், சுமார் 11,000 ஓலைச் சுவடிகள்  இன்னும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருக்கின்றன.

அமேதி, ரேபரேலியில் போட்டியிட ராகுல், பிரியங்கா தயக்கம்: இன்றிரவுக்குள் முடிவு!

கோயில்கள், மடங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை  சேகரித்து, அந்த ஓலைச் சுவடிகளைப்  பாதுகாக்கவும் ஓலைச் சுவடிகள் துறை  உத்தேசித்துள்ளது.

 தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் 2019 முதல் 2022 வரை ரூ 16,03,998, அளித்தது. அதன் பின்னர் நிதிநல்கை  நிறுத்தப்பட்டுள்ளது. ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தொடர்ந்து நிதிநல்கை கிடைக்கும் என நம்பி  ஜனவரி 2024 வரை பணிபுரிந்தனர். நிதிநல்கை  கிடைக்காததால், பணிகள் நிறுத்தப்பட்டன, அவர்கள் வேலைக்கு வருவதும் நின்றுவிட்டது. இப்போது அந்த மையத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் வழங்கிய சராசரி நிதிநல்கை ஆண்டுக்கு 3.30 லட்சம்தான். ஓலைச்சுவடிகளின் மதிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகவும் சிறிய தொகையாகும்.

ஓலைச் சுவடிகள் பாதுகாப்புப் பணிகளைத் தொடரவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தைத் தொடர்ந்து நடத்திட  பல்கலைக்கழகத்திற்கு உதவிடவும், உரிய நேரத்தில் நிதிநல்கையை  வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!