தொட்டு பேசுறாங்க.. இரட்டை அர்த்தத்தில் பேசுறாங்க.. புகார் கொடுத்த 13 மாணவிகள்.. சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்

By Thanalakshmi VFirst Published Dec 24, 2021, 2:37 PM IST
Highlights

ராமநாதபுரம் பரமக்குடி அருகே அரசுப் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சமூக அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

ராமநாதபுரம் பரமக்குடி அருகே அரசுப் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சமூக அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அண்மையில் இப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாணவிகளிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணை தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்திலும் பேசுகின்றனர் என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்வதாகவும் மாணவிகள் புகாரில் கூறியுள்ளனர். 

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் பெருமாள்கோவில் அரசு பள்ளியில் விசாரணை செய்துள்ளார். மாணவிகள் கொடுத்த புகார் உறுதியான நிலையில் தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்  பாலியல் தொந்தரவில் ஈடுப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மாணவிகளும் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் விருதுநகரை சேர்ந்த ராமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!