
சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு : பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அப்போது வன்னியர் சங்கம் உருவான வரலாறு மற்றும் சித்திரை பெருவிழா மாநாடு தொடர்பான பாடல் பாடியும், நடனங்கள் ஆடி கலை குழுவினர் அசத்தினர். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
நம் சமூக மக்கள் நமக்கே ஓட்டுபோடவில்லை-ராமதாஸ்
ஆனால் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். தனியாக யானை சின்னத்தில் நின்று முன்பு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறுகிறோம். நமக்கு வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, கோபம் வரவில்லையா? ஆனால் கோபம் வரலை. நம் சமூக மக்கள் நமக்கே ஓட்டுபோடவில்லை என ஆவேசமாக கூறினார்.
தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்- ராமதாஸ்
ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். குறைந்தது 50 தொகுதிகளில் நாம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும் என கூறினார். இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன் என எச்சரித்தார்
கூட்டணி குறித்து நான் முடிவெடுப்பேன்- ராமதாஸ்
தேர்தல் நெருங்கும் நிலையில் சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார். மேலும் வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என இது எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பில் இருக்க முடியாது என கோவத்தோடு ராமதாஸ் பேசினார்.
உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல என ராமதாஸ் கூறினார்.