ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவுக்கு கார் ஓட்டுநராக இருந்தவரும் விபத்தில் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இதே வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவரும் நேற்று விபத்தில் சிக்கி தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். இவரது மனைவி வினுப்பிரியா 5 வயது குழந்தை ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவங்கள் தற்செயலானதா அல்ல திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முறை பலியாகி இருப்பது முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவின் முன்னாள் கார் ஓட்டுநர் ரவிச்சந்திரன்.
தாம்பரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவிச்சந்திரன் தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழன்தார். முக்கிய பிரமுகர்களின் முன்னாள் கார் ஓட்டுநர்கள் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.