சென்னையில் இப்போது லேசாக அடிக்கும் வெய்யிலைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! மழை இன்னும் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். இவரது கணிப்புகள் பெரும்பாலும் உண்மையானதால், இவரது சேவையை பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியிருந்தார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளவை...
சென்னையில் இப்போது அடிக்கும் வெயிலைப் பார்த்து மழை முடிந்துவிட்டது என்று ஏமாந்துவிடாதீர்கள். கடந்த செவ்வாய்கிழமையன்று இரவில் பெய்த மழைபோல் மீண்டும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் நேற்றுபோல் இன்றும் கனமழை இருக்கும்.
இலங்கை கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிக்கிறது, அது அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு அந்த பகுதியிலேயே நிலையாக இருக்கும், என்பதால், அதிகமான மழையை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை அடை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்கள்…
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மீண்டும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் கனமழை பெய்யலாம். விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கூட மழை இருக்கும்.
டெல்டா பகுதியில் மழை
டெல்டா மாவடங்களில் மழை தொடரும். அங்கு மழை பெய்ய இதுதான் சரியான தருணம். தென்கிழக்கில் உள்ள மேகம் முழுமையாக டெல்டா பகுதியை மூடியுள்ளதால் மழை இருக்கும்.
- இப்படி தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கும் கூற்றின்படி பார்த்தால், இன்னும் நான்கைந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், மாலை நேரங்களில் சென்னையில் பலத்த மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே வெளியில் செல்வோர், அலுவலகம் செல்வோர் சற்று எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படலாம்!