வங்க கடலில் 65கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று..! 4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Nov 20, 2022, 1:53 PM IST
Highlights

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வட கிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையானது பெய்து வருகிறது. இந்தநிலையில் மீண்டும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நேற்று (19.11.2022) தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று (20.11.2022) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் காரைக்காலில் இருந்து  சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில்  கிழக்கு-தென்கிழக்கேயும்,  சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில்  கிழக்கு-தென்கிழக்கேயும்  மையம் கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு  திசையில் நகர்ந்து தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த  48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

மழை எச்சரிக்கை நிலவரம்

20.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்;  சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

20.11.2022 முதல் 22.11.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.11.2022 மற்றும் 22.11.2022:  மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்  என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆளுநர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்..! முதலமைச்சர்களை அவமதிக்கும் செயல்..! திருமாவளவன் ஆவேசம்

click me!