
டெல்லியில் குடியரசு தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. குடியரசு தின விழாவில் ராகுல் காந்திக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை இப்படி அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
2018ம் ஆண்டு இதேபோல் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நெறிமுறைப்படி, எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய அமைச்சர்களுடன் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். பலருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தும், எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை மட்டும் ஏன் மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டது என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்றாவது வரிசையில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு காங்கிரஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2014 குடியரசு தின அணிவகுப்பின் போது எல்.கே. அத்வானிக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்த மாணிக்கம் தாகூர், இந்த மரபு மீறல் குறித்து கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் தரம் தாழ்ந்த அரசியல்
இது தொடர்பாக பேசிய மாணிக்கம் தாகூர், ''இது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனநிலையைக் காட்டுகிறது... 2014 வரை, எதிர்க்கட்சித் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் எப்போதும் அங்குதான் அமர்ந்திருந்தனர். இது மத்திய அரசின் மிகத் தாழ்ந்த அரசியல். குடியரசு தினத்தன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அவமதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குடியரசு தினம் என்பது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, அந்த ஆண்டில் இந்தியாவின் சாதனைகளைக் கொண்டாட வேண்டிய நாள்” என்று தெரிவித்தார்.
இந்த நாடு எங்களுடையது
காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து காங்கிரஸ் விடுவித்தது. மக்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. மத்திய அரசு ராகுல் காந்தியை அமர வைத்தாலும், இந்த நாடு எங்களுடையது” என்றார்.